03 December 2015

சித்தன்ன வாசல் ஓவியம்



சித்தன்னவாசல் என்பது  துறவிகள் இருப்பிடம் எனப்பொருள்படும். இந்தியாவின் மாநிலமான தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மருவி சித்தன்னவாசல் என்று ஆயிற்று. புதுக்கோட்டைக்கு அருகில் நாரத்தமலை புகைவண்டி நிலையத்திலிருந்து 3.2km தொலைவில் உள்ள இந்த சிறிய மலை மீது ஏறிச் சென்றால் ஓவியங்கள் தீட்டப்பட்ட குகைக் கோயிலைக் காணலாம். இங்கு காணத்தக்கவை நான்கு: உருவச்சிலைகள், நடனமாதர் ஓவியங்கள், அரசன், அரசி ஓவியங்கள் என்பன.

சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி. 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வடபகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இவ் ஓவியங்கள்  1000 - 2000 ஆண்டுகள் பழைமையனவை. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் படுக்கையும் தவம் செய்யும் இடமும்,  , பல இடங்களில் குடைவறைகளும்  காணப்படுகின்றன. சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப் பட்டம் என்ற இடத்தில் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்கு உள்ளது.
  

26 December 2009

இது மேகம் சுரந்த பாடல்



தற்பாதுகாப்பு கருதி

சூழலுக்கேற்ப நிறம் மாறும்

பச்சோந்தி போல்

சில நிமிட வேளையில்

உரு மாறும் உன்னை

எத்தனை முறை கேட்டிருப்பேன்

மேகமே! ஏன் அடிக்கடி

உரு மாறுகிறாய் என்று........


அத்தனை மௌனமும் இன்று

மொத்தமாய் வெளிப்படுகிறது

கை கோர்த்து

மேகமே! நீ

ஒன்று சேர்ந்தது

கூடியிருந்து பாட நினைத்துவிட்ட -இந்த

ஒப்பாரிப் பாடலுக்காய்த்தானா !


வடக்கிலங்கையில்

உதிரத்தை வியர்வையாக்கி

உழுது களைத்து

விண்ணை நோக்கி

உன்னை ஆனந்தக் கண்ணீராய்

அனுபவிக்கத் துடித்த

உழவர்களின் விளை நிலம் - இன்று

தரிசாகியதே!


தரிசு நிலத்தில்

படிந்து கிடக்கும்

இரத்தக் கறையை கழுவிட

மேகமே!

நீ சுரந்த இந்த சோகப்பாடல்

போதும் என்று

நினைத்து விட்டாயோ?

தோற்றுவிடுவாய் !


விண்ணை விட்டு நீங்கும் தாரகைகள்

மண்ணில் வீழ்ந்து விட்ட ஈரம்

காய்ந்துவிடும் ஓர்நாள் !

பிள்ளைகளின் பிரிவினையை நினைத்து

உருகும் தாயின் கண்ணீர்!

கணவனை இழந்து தவிக்கும்

மாதரின் கண்ணீர் !

பெற்றவர்களை இழந்து தவிக்கும்

பிள்ளைகளின் கண்ணீர் !

எப்போது காயும் யாரறிவர்?


உன் கண்ணீர்த் தாரகைகள்

கண்டு கதிகலங்கும்

விருட்சங்கள் கூட

கண்ணீர் சிந்துகின்றனவே!

ஒரு மானிடனின் கண்ணீர்

ஏன்?

இன்னோர் மானிடனின்

மனதை  வாட்டுவதில்லை???


மேகமே!

மின்னலாய்  வெளிப்படும்

உன் விம்மலும்,

இடியாய் நீ

முழங்கிடும் கதறலும்

சுதந்திர அன்னையின் துயிலைத்

தட்டி எழுப்பிடுமா?


என்றோ ஒரு நாள்

விடிவு வரும்!!!!

நம்பிக்கையுடனிரு

அன்றைய தினம்

மேகமே!சுரந்திடு

உன்

சுதந்திரப் பாடலை ...